கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை


கொலை செய்யப்பட்ட வெள்ளத்துரை மற்றும் சாமி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் அங்குள்ள ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன் கடை நடத்தி வந்தார். இரவில் மீன் கடையில் தூங்குவது இவரது வழக்கம். நேற்றிரவும் அவர் தனது கடையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி வந்த நிலையில் சாலையில் விழுந்து உயிரிழந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரண்டு பேரின் சடலங்களும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ன.

தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x