வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாய், மகனை தாக்கிய காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்


சென்னை: சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ஆர்.வாசுகி, ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 11-ம்தேதி மாலை 5 மணியளவில் அப்போதைய நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.ராஜசேகரன் (காஞ்சிபுரம்) உள்ளிட்ட 4 போலீஸார், அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் என் வீட்டு சுற்றுச்சுவரை அளவீடு செய்தனர்.

இதுகுறித்து கேள்வியெழுப்பிய என்னைக் கீழே தள்ளி, ஷூ காலால் உதைத்தனர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், புதுப்பாக்கம் கிராமத்தில் சிதம்பரம் என்பவரிடம் நிலம் வாங்கும் விவகாரத்தில் ஏமாற்றியதற்காக எனது கணவர் ராஜகோபாலை கைது செய்யவுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

எனது கணவரோ ஹாலந்தில் பணியாற்றிவருகிறார். போலீஸார் கூறும் நிலத்துக்கான பணத்தைக் கொடுத்ததற்கான ஆவணங்களை அவர்களிடம் காண்பித்தேன். ஆனால், அவர்கள் என்னை கன்னத்தில் அறைந்து கடுமையாகத் தாக்கினர்.

மேலும் எனது 14 வயது மகனைத் தாக்கி, `தந்தை குறித்து கூறாவிட்டால் தேர்வெழுத முடியாது' என மிரட்டினர். மேலும், ஒரு நாளில் எனது கணவர் வராவிட்டால் மொத்த குடும்பத்தையும் சிறைப்படுத்துவதாகவும் மிரட்டினர். அவர்களின் தாக்குதலுக்குள்ளான நாங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்றோம். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு ரூ.1.50 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடாக வழங்கிவிட்டு, அந்தத்தொகையை சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

x