3 ஆண்டுகளில் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,551 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


சென்னை: அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,551.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம், தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதள செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் ஜூன் 6-ம் தேதி நிலவரப்படி 44,09,439 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில், பதிவு, புதுப்பித்தல், மனுக்கள் பெறுதல், பணப்பயன்களை வங்கிக்கணக்குக்கு அனுப்புதல் ஆகிய பணிகள் 40 தொழிலாளர் உதவி ஆணையர்களால் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இணையதள செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில தரவுகள் மையத்திடம் க்ளவுட் சர்வர்கள் பெறப்பட்டு அவற்றில் இணையதள தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சர்வர் பழுது காரணமாக இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மறு பதிவேற்றம் செய்து, பதிவு உள்ளிட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நிலுவை மனுக்களுக்கான ஆவணங்களை தொழிலாளர்களிடமிருந்து பெற்று பதிவேற்றம் செய்ய உதவி ஆணையர் அலுவலகங்களில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, மீண்டும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தொழிலாளர்களை கோர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் கீழ் செயல்படும் இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி தொழிலாளர்களின் ஆவணங்களை வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்களிடம் இருந்து ஓடிபி பெறும் முறை நீக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதியதாக 16,00,499 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். மேலும், 18,46,945 தொழிலாளர்களுக்கு ரூ.1,551 கோடியே 81 லட்சத்து 70,338 நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசீலித்து, நலத்திட்ட உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x