ஸ்ரீரங்கம் கோயிலில் லட்டு, மைசூர்பாகுக்கு பதில் வெண்பொங்கல், புளியோதரை வழங்கல்


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு, மைசூர்பாகுக்கு பதிலாக நேற்று முன்தினம் முதல் வெண்பொங்கல், புளியோதரை வழங்கப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் காலை முதல் இரவு வரை லட்டு அல்லது மைசூர்பாகு இலவச பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. இவை ஒப்பந்ததாரர் மூலம் தயாரித்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பக்தர்கள் பலர் இனிப்பு சாப்பிட விரும்பாததாலும், நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு வருவதால், அவர்களது பசியைப் போக்கும் வகையிலும் அவர்களுக்கு சிற்றுண்டிபோல நேற்று முன்தினம் முதல் வெண்பொங்கல், புளியோதரை போன்ற ஏதாவது ஒரு உணவு வகை வழங்கப்பட்டு வருகிறது. இவை கோயில் ஊழியர்களைக் கொண்டு மடப்பள்ளியிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் ஆலோசனைப்படி இலவச பிரசாத வகைகளில் மாற்றம் செய்யவும் தயாராக இருப்பதாக அறநிலையத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

x