ஜூன் 17-ல் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் குடமுழுக்கு


தென்திருப்பதி என போற்றப்படும் திருமலைவையாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக தயார் நிலையில் உள்ள ராஜகோபுரம்.

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயிலுக்கு ஜூன் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில் தென்திருப்பதி என போற்றப்படும் அலர்மேல்மங்கை தாயார் சமேத ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், நரசிம்மர், ராமானுஜர், வராகப்பெருமாள் உள்பட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளது. மேலும், கோயிலில் வராகதீர்த்தம் குளம் அமைந்துள்ளது. இங்கு, சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கோயிலில் உள்ள மண்டபங்கள், தூண்கள், ராஜகோபுரம் உள்ளிட்டவை சேதமடைந்தும் பொலிவிழந்தும் காணப்பட்டதால் கோயில் திருப்பணிகளை தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தர். இதன்பேரில், கடந்த ஆண்டு பாலாலயம் செய்து கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதில், கோயில் நிதியாக ரூ.48.85 லட்சம், ஆணையர் பொதுநல நிதியாக ரூ.69 லட்சம் மற்றும் உபயதாரர்கள் நிதியாக ரூ.18.40 லட்சம் என மொத்தம் 1.36 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது இந்தக் கோயிலுக்கு சுற்றுச்சுவர், கங்கைகொண்டான் மண்டபம், அன்னதானக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதால் வரும் ஜூன் மாதம் 17ம் தேதி காலை 9:30 மணியலிருந்து 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுவதால் கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால், தேவையான முன்னேற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மேக வண்ணன் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

x