தமிழகத்தில் 800+ ஓய்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடியாமல் தவிப்பு


தாம்பரம்: தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் சுமார் 800 பேர் கடந்த ஓராண்டாக ஓய்வூதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் சுமார் 40,000 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் நகராட்சி, மாநகராட்சிகளில் இருந்து பலர் ஓய்வு பெற்றும் வருகின்றனர். அவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை மூலம் அவர்களின் பதவிக்கு ஏற்றார் போல் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஓய்வு பெற்ற சுமார் 800 பேர் இந்நாள் வரை ஓய்வூதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணிஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஜூலை மாதத்திற்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது.

ஓய்வு பெற்றவர்கள் பலர் தங்கள் அத்தியாவசிய, மருத்துவச் செலவுக்கு இந்த தொகையையே நம்பி இருக்கின்றனர். எனவே ஓய்வு பெற்றவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஓய்வூதியர் சங்கத்தினர் சிலர் கூறுகையில், “நகராட்சி, மாநகராட்சிகளில் சுமார் 800 பேர் கடந்த ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் இன்னும் ஓய்வூதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டும் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி காலதாமதம் செய்யப்படுகின்றது.

ஓய்வூதியம் கிடைக்காததால் பல ஓய்வுபெற்றவர்கள் பிறரை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிலர் குடும்பச் செலவுக்கும், சிலர் மருத்துவச் செலவுக்கும் மற்ற அத்தியாவசிய செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.

எனவே ஓய்வு பெற்றவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை தள்ளி வைப்பது ஏற்புடையது அல்ல.

எனவே கூடுதல் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இதேபோல் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் சில ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்

x