ராமநாதபுரத்தில் மது போதையில் உறவினரை அடித்துக் கொன்ற பரோட்டா மாஸ்டர் கைது


கணேசன்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், மதுபோதையும் உறவினரை அடித்துக் கொன்ற பரோட்டோ மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரவிக்குமார் (35). ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி செட்டியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). இவர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பரோட்டோ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரவிக்குமாரின் அக்காள் கணவருடைய தம்பியாவார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக ரவிக்குமாரின் மனைவி பரணி தனது 6 வயது மகனுடன் மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதனால் கடந்த 4 மாதங்களாக கணேசன், ரவிக்குமார் வீட்டில் தங்கியுள்ளார். கூலி வேலை செய்யும் ரவிக்குமாரும், கணேசனும் அடக்கடி மது அருந்தி வந்துள்ளனர்.

நேற்றிரவும் இருவரும் மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வீட்டின் அருகே இவருக்கும் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், ரவிக்குமார் செங்கலால் கணேசனை தாக்கியுள்ளார். அதனையடுத்து கணேசன், கம்பால் ரவிக்குமாரை தலையில் அடித்ததுள்ளார். இதில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த கேணிக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, ரவிக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணேசனுக்கு மனைவியும் 14 வயதில் ஒரு மகளும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

x