ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் கைது @ கோவை


பிரதிநிதித்துவப் படம்

கோவை: ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள திரைப்பட தயாரிப் பாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை வட வள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் துவாரக் உதய சங்கர். இவர் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில், ‘‘நான் கனடாவில் வசிக்கிறேன். கடந்த 2016-ம் ஆண்டு கத்தாரில் பணிபுரிந்தபோது மலையாள மொழி திரைப்படத் தயாரிப்பாளரான கொச்சியை சேர்ந்த ஜானி தாமஸ், என்னையும் எனது நண்பர் ஜின்ஸ் என்பவரையும் அணுகினார். அப்போது அவர் மீண்டும் மலையாள திரைப் படங்களை தயாரிக்க உள்ளதாகவும், அப்படங்களுக்கு முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, நான் ரூ.75 லட்சத்தை முதலீடு செய்தேன். பின்னர், அவர்கள் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினர். தொடர்ந்து என்னிடம் மேலும் ரூ.2 கோடி கேட்டனர். நானும் கொடுத்தேன். பின்னர், 2018-ம் ஆண்டு எனது பணத்தை திரும்பக் கேட்டேன். அப்போது ஜானி தாமஸ் ரூ.50 லட்சத்தை மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை சிறிது காலம் கழித்து திருப்பி தருவதாக உறுதியளித்தார்.

ஆனால் தரவில்லை. ஜானி தாமஸ், அவரது மகன் ரான் ஜானி மீது போலீஸார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்’’எனக் கூறியிருந்தார். அதன் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். ஜானி தாமஸ் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஜானி தாமசை கொச்சி போலீஸார் உதவியுடன் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வைத்து நேற்று கோவை போலீஸார் கைது செய்தனர். அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

x