ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்பு


மூதாட்டி பத்திரமாக மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஜெயங்கொண்டம் அருகே வானமாதேவி மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி (80). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஊர் ஊராகச் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரியபாளையம்- கடாரம்கொண்டான் செல்லும் சாலையில் அமைந்துள்ள கொடப்பேரி அருகே மூதாட்டி செல்வி நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி செல்வியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது கிணற்றுக்குள் மூதாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தண்ணியில்லா கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மூதாட்டி செல்வி சிகிச்சை பெற்று வருகிறார். கிணற்றில் விழுந்ததால் செல்விக்கு கையில் லேசாக முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கிணற்றுக்குள் இருந்து மூதாட்டியை பத்திரமாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

x