அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடங்களை நீக்கியது ஏன்?- தமிழக அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு


மதுரை: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நூலகர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்கக் கோரி, பள்ளித் தாளாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், பள்ளிக்கல்வித் துறை 2018-ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடத்தை நீக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இனி நூலகம் இருக்காது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவா? அப்படி இருந்தால், அரசுப் பள்ளிகளைச் சார்ந்து இருக்கும் இளம் மாணவர்களின் அறிவாற்றல் பரவலாக்கம் உறுதி செய்யப்படுமா? நூலகங்கள் தொடர்பான அரசின் இந்த முடிவு அவசியமா? அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் தேவை என்றால், அந்த நூலகங்களை, நூலகர் உதவிஇன்றிச் சிறப்பாகக் கையாள முடியுமா? அரசுப் பள்ளிகளில் நூலகர்கள் பணியில் அமர்த்தப்படுவது அரசின் கொள்கை முடிவாக இருந்தால், இதே நடைமுறையை அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏன் பின்பற்றக் கூடாது?

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் மற்றும்இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜூன் 13-க்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

x