பிரேமலதா தலைமையிலான தேமுதிக மீண்டெழுமா? - தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி


சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் தேமுதிக தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், பிரேமலதா தலைமையிலான தேமுதிக மீண்டு வருமா? என கேள்விகள் எழுந்துள்ளன. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் (தனி), வடசென்னை ஆகிய 5தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

குறிப்பாக, திருவள்ளூர், வடசென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதில் வடசென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் (விஜயகாந்த் மகன்) மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடைசி சுற்று வரை கடுமையான போட்டியாக விளங்கினார்.

குறைந்தளவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஒட்டுமொத்தமாக விஜய பிரபாகரன் 3 லட்சத்து 80,877 வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதேநேரம் தொடர்ந்து சரிவில் பயணித்த தேமுதிகவின் வாக்கு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. தற்போதைய தேர்தலில் தேமுதிக தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் சேர்த்து 11 லட்சத்து 28,616 (2.59%) வாக்குகளைப் பெற்றுள்ளது. இது சமீபத்திய தேர்தல்களைவிட அதிகமாகும்.

முதன்முதலாக 2005-ம் ஆண்டுசட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 27.64 லட்சம் வாக்குகளைப் பெற்றது. கட்சி ஆரம்பித்தவுடன் நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

அதற்கடுத்து 2009 மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 31.26 லட்சம் வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.3 சதவீதமாகும். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 7.9 சதவீத வாக்குகளுடன் 29 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாகவும் அங்கீகாரம் பெற்றது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகக் கருதப்பட்ட தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு சென்றதை நடுநிலை வாக்காளர்கள் விரும்பவில்லை. மேலும், கட்சிக்குள் குடும்ப ஆதிக்கம் வந்ததைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தேமுதிகவில் இருந்து வெளி யேறினர்.

அதன்பின் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் பாதிக்கப்பட, கட்சியின் வளர்ச்சி தடைபட்டது. இதற்கிடையே, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் 14 இடங்களில்போட்டியிட்ட தேமுதிக அனைத் திலும் தோல்வியடைந்தது. வாக்கு விகிதமும் 5.1 சதவீதமாகக் குறைந்தது.

தொடர்ந்தது. 2016 சட்டமன்றத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிஎன்ற பெயரில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41சதவீதமாகக் குறைந்தது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், சுமார் 34,000வாக்குகளுடன் 3-வது இடத்தையே பிடித்தார்.

அடுத்து, 2019 மக்களவைத் தேர்தலில் 2.16 சதவீதம், 2021 சட்டமன்றத் தேர்தலில் 0.43 சதவீதம் எனதேமுதிகவின் வாக்கு வங்கி வெகுவாகக் குறைந்து கொண்டே வந் தது. இந்தச் சூழலில் தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 28-ம் தேதிகாலமானார். அதற்கு சில நாட்களுக்கு முன் அவரின் மனைவி பிரேமலதா, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்துவந்த பிரேமலதா, 2018-ம் ஆண்டில் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நலம் வெகுவாக குன்றியதால் கட்சியின் முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார். விஜயகாந்த் மறைவுக்கு பின்புகட்சியின் முழுமையான கட்டுப்பாடு பிரேமலதாவிடம் வந்தது.

தொடர் தோல்விகள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல வேண்டிய நிர்பந்தம் பிரேமலதாவுக்கு இருந்தது. அதற்கேற்ப தற்போதைய மக்களவைத் தேர்தலை அதிமுக கூட்டணியில் சேர்ந்து எதிர்கொள்ள தேமுதிக முடிவு செய்தது. அது தேமுதிகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

தற்போது, அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2.59% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரசியல் களத்தில் தன் இருப்பை தக்கவைத்துள்ளது. எனினும், அதிமுகவிடம் சாதகமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்று,விருதுநகர் போல் மற்ற தொகுதிகளிலும் தேமுதிக தீவிரமாக களப்பணி ஆற்றியிருக்க வேண்டும்.

அதேபோல், விஜயகாந்த் மறைவு மீதான அனுதாபத்தையும் முழுமையாக அறுவடை செய்திருந்தால் 4 சதவீதம் வரை வாக்குகளை தேமுதிக பெற்றிருக்கலாம் என்றுஅரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

x