தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல்,ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும்திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 13 செமீ, பையூரில் 11 செமீ, திருச்சி மாவட்டம் சிறுகமணி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் ஆகியஇடங்களில் தலா 7 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், பொன்னேரி ஆகிய இடங்களில்தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 9-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x