விடாப்பிடி விருதுநகரில் ஒவ்வொரு சுற்றிலும் ‘திகில்’ - கண்கலங்கிய விஜய பிரபாகரன்


வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியதால் கண்கலங்கிய தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்.

விருதுநகர்: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் எதிர்பாராதவாறு வெற்றி யாருக்கு என்பதில் தேமுதிக-காங்கிரஸ் இடையே கடைசி வரை கடும் போட்டி நிலவியதால் பேசு பொருளாகி உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடை பெற்றது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன.

இந்த 4 முனை போட்டியில் திமுக கூட்டணியானது மொத்தமுள்ள 39 தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. இதற்கிடையே இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவுக்கு விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர்(தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் விருதுநகர் தொகுதி யில் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். மறுபுறம் காங்கிரஸ் தரப்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் களமிறங்கினர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக இடையே ஆரம்பம் முதலே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றின் முடிவில் 187 வாக்கு கள் முன்னிலை பெற்ற விஜய பிரபாகரன், தொடர்ந்து 7-வது சுற்று வரை முதலிடத்தில் இருந்தார்.

அதன்பின் மாணிக்கம் தாகூரின் கை ஓங்கியது. எனினும், ஒவ்வொரு சுற்று முடிவிலும் இருவருக்கும் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசமே இருந்தன. இறுதிச் சுற்றுக்கு முந்தைய 24-வது சுற்றின் முடிவில் மாணிக்கம் தாகூர் 4,633 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தார்.

இதனால் வெற்றி யார் வசம் என்ற பரபரப்பு அரசியல் ஆர்வலர்களிடம் தொற்றிக் கொண்டது. மறுபுறம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார்.

கட்சி யின் மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து மகனின் வெற்றிக்காக விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு அவர் மனம் உருகி பிரார்த்தனை செய்தார். இதற்கிடையே 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலி லும் விருதுநகரில் தேமுதிகவே போட்டியிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆனால், இந்த முறை யாரும் எதிர்பாராதவாறு மாணிக்கம் தாகூருடன் இறுதிச் சுற்று வரை விஜயபிரபாகரன் விடாப்பிடியாக போட்டியை கொடுத்தது பரவலாக பேசு பொருளாகி உள்ளது.

விருதுநகர் தொகுதியில் வரும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளும் அடக்கம். மொத்தமுள்ள 14 லட்சம் வாக்கு களில், அந்த 2 தொகுதிகளில் மட்டுமே 8 லட்சம் வாக்குகள் உள் ளன. தவிர விஜயகாந்த் சொந்த ஊரான இராமானுஜபுரம் இந்த தொகுதியில்தான் வருகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிந்தைய அனுதாப வாக்குகளும் விஜய பிரபாகரனுக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.

2009 மக்களவைத் தேர்தலில் மூத்த தலைவரான வைகோவை எதிர்த்து வெற்றிபெற்றவர் மாணிக்கம் தாகூர். 2019 தேர்தலிலும் வெற்றிபெற்று எம்பியாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய பிரபாகரன் கடுமையான போட்டியாக விளங்கி அரசியல் வல்லுநர்கள் மத்தியில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்தங்கியதால் கண்கலங்கிய தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்: விருதுநகர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இறுதிச் சுற்றுகளில் பின்னடைவு ஏற்பட்டதால், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கண்கலங்கினார். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை, விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்துவந்த தேமுதிக வேட் பாளர் விஜயபிரபாகரன், 10 சுற்றுக ளுக்குப் பிறகு பின்தங்கினார். இருப்பினும், காங்கிரஸ் வேட் பாளர் மாணிக்கம் தாகூருக்கும், விஜயபிரபாகரனுக்கும் 2 ஆயிரத் துக்குள்ளான வாக்கு வித்தியாசமே நீடித்து வந்தது. 20 சுற்றுகளுக்கு மேல் விஜயபிரபாகரனை விட, மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார்.

வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டதால், வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் அமர்ந்திருந்த விஜயபிரபாகரன் கண்கலங்கினார். இதையடுத்து, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுகவினர் அமைதியாகவும், சோகத்துடனும் வாக்கு எண் ணிக்கை மையத்திலிருந்து வெளி யேறினர்.

x