பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு நிபந்தனை ஜாமீன்


சென்னை: 1995-ம் ஆண்டு கலாஷேத்ராவில் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளி கல்லூரியில் கடந்த 1995 - 2001 காலகட்டத்தில் படித்த, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியரான ஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இ-மெயில் மூலமாக போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் கடந்த ஏப்.22-ம் தேதி ஜித் கிருஷ்ணாவை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜித் கிருஷ்ணா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “28 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது.

பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் அளிக்கவில்லை. இந்த புகாரே பொய்யானது. ஜோடிக்கப்பட்ட ஒன்று. மனுதாரருக்கும், கல்வி நிலையத்துக்கும் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

“ஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகாரளிக்க தயங்குவர்” என முன்னாள் மாணவி தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளதாகவும், இன்னும் சிலர் புகாரளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரான ஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய முன்அனுமதி பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

x