சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1433 பேர்: கணினி குலுக்கல் முறையில் பணிகள் ஒதுக்கீடு


சென்னை: சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் 1,433 பேர்பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு சட்டப்பேரவை தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் பணிகள் நேற்று ஒதுக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னையில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளன. இந்த 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை 1,384 பாதுகாப்புப் படை வீரர்கள், போலீஸார் பாதுகாத்து வருகின்றனர்.

வெளிப்படையான ஒதுக்கீடு: வாக்கு எண்ணும் பணியில் வட சென்னையில் 357 பேர், தென் சென்னையில் 374 பேர், மத்திய சென்னையில் 380 பேர் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் உட்பட மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணிபுரியவுள்ளனர். இவர்களுக்கு மக்களவை தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் கடந்த மே 27-ம் தேதி பணி ஒதுக்கப்பட்டது.

அந்தந்த மக்களவை தொகுதிக்குள் வரும் தலா 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் பணிஒதுக்கீடு செய்யும் பணி ரிப்பன்மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் டி.சுரேஷ், கார்த்திகேய் தன்ஜி புத்தப்பட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, ராஜேஷ் குமார், ஜிதேந்திரா ககுஸ்தே, முகமது சஃபிக் சக் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.

அவர்களுக்கு மேசை வாரியாக பணி ஒதுக்கும் பணி இன்று காலை 5 மணிக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``வெளிப்படையான முறையில், இந்த பணி ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

x