மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்ல தனியார் நிறுவனம் அறிவிப்பு


பிரதிநிதித்துவப் படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தொட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்ல தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 5 தலைமுறைகளாக இங்கு தங்கியிருந்து பணிபுரிகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்குமுன் சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இந்த எஸ்டேட் பகுதி 1929-ம் ஆண்டில் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது. குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்ல அத்தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால். சிங்கம்பட்டி குரூப்பின் வணிகத்தை நிலை திருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி.லிமிடெட் வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் பலன்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அதனை தேர்வு செய்து கொள்ள அழைக்கப் படுகிறார்கள்.

விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பிபிடி லிமிடெட் நிறுவனமானது, சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது அதனோடு சேர்த்து கருணைத் தொகையும் மற்றும் 2023 - 2024ம் நிதியாண்டுக்கான சட்டப்படியிலான போனஸ் தொகையும் (மிகை ஊதியம்) இணைத்து வழங்கப்படும். விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் அதில் கையொப்பமிட வேண்டும்.

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர்கள் பெறுகின்ற பணப் பலன்களின் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும். தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் டேட் அலுவலகத்திலும் தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பார்வைக்காக வரும் 14-ம் தேதி வரை வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் வரும் 14-ம் தேதியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

x