மதுரை கூடலழகர் கோயிலில் தசாவதாரம்: கருட வாகன புறப்பாடு


படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வியூக சுந்தரராஜ பெருமாள் பல்வேறு அவதாரங்களில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று காலையில் கருட வாகனத்தில் ராமராயர் மண்டபத்திலிருந்து கோயிலுக்கு புறப்பட்டார் வியூக சுந்தரராஜ பெருமாள்.

மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் சிம்மம், அனுமார் வாகனம், கருடன், சேஷ வாகனம், யானை, பூச்சப்பரம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9-வது நாள் தேரோட்டம் நடந்தது. 10-ம் நாள் எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணத்தில் எழுந்தருளினர். 11-ம் நாள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுப்பாலத்தில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வியூக சுந்தரராஜபெருமாள், மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், தங்க அங்கி அலங்காரம், முத்தங்கி அலங்காரம், வாமன அவதாரம், ராம அவதாரம், வைகுண்ட நாதர் அலங்காரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரங்களில் அருள்பாலித்தார்.

கோயில் பரம்பரை அர்ச்சகர் கோபி பட்டாச்சாரியார் சிறப்பு பூஜைகள் தீபாராதனை செய்தார். இன்று காலையில் மோகினி திருக்கோலத்துடன் பத்தியுலா முடிந்து காலை 9 மணியளவில் கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் ராமராயர் மண்டபத்திலிருந்து புறப்பட்டார்.

பனகல் சாலை, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சன்னதி தெரு, கீழாவணி மூல வீதி வழியாக தெற்காவணி மூல வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருளினார். இன்று மாலை 4 மணிக்கு திருமஞ்சனமாகி இரவு 7 மணிக்குமேல் குதிரை வாகனத்தில் கோயிலுக்கு புறப்படுகிறார்.

13-ம் நாள் (மே 28) இரவு விடையாற்றி உற்சவம் நடைபெறும். 14-ம் நாள் (மே 29) 10.30 மணியளவில் உற்சவ சாந்தி அலங்காரத் திருமஞ்சனம் முடிந்து 11.30 ஆஸ்தானம் சேருகிறார் வியூக சுந்தரராஜ பெருமாள். இத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

x