குமரி பகவதியம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு


கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழா நிறைவு நாளான நேற்று முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில்10 நாள் வைகாசி விசாக திருவிழா கடந்த 14-ம்தேதி தொடங்கியது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. மாலையில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, விசேஷ பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வீதி உலா நடந்தது. 10-ம் திருவிழாவானநேற்று அதிகாலையில் அம்மனுக்கு முக்கடல்சங்கமத்தில் ஆராட்டு நடைபெற்றது,.

இதையொட்டி உற்சவர் அம்மனை கோயிலில் இருந்து மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்துக்கு எடுத்து வந்தனர். மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடந்தது.

மணலிக்கரை மாத்தூர் மடத்தின் தந்திரி சஜித் சங்கர நாராயணரூ தலைமையில் நடைபெற்ற ஆராட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆடி மற்றும் தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, நவராத்திரி விஜயதசமி திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய 5 முக்கிய விசேஷ தினங்களில் மட்டும் திறக்கப்படும் கோயிலின் கிழக்கு வாசல் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார்.

தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.மாலை மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவுதெப்பத் திருவிழாவும் நடந்தது. நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு மீண்டும் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

x