சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேர்த் திருவிழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு


அரியலூர்: சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டு தேர்த் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 14-ம் தேதி செல்லியம்மன், மாரியம்மனுக்கு காப்பு கட்டி நாள் தோரும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை, மாலை இரண்டு வேளையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவில் ஐந்தாம் நாள் மாதிரிதேர் விழாவும் ஏழாம் நாள் பூந்தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தேர் கட்டும் பணியில் ஈடுபட்டனர். கூலி ஆட்கள் இல்லாமல் சிறுகடம்பூர் கிராம மக்களே இணைந்து தேரின் அனைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தேரினை இழுத்து செல்வது இந்த ஊர் தேர்த் திருவிழாவின் தனிச் சிறப்பு ஆகும். அதன்படி, தேர் கட்டுமானப் பணிகள் முடிந்து தேர் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டது. விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி, மா, பலா ஆகியவற்றை கையிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்கவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மனையும், மாரியம்மனையும் அருகருகே தேரில் ஏற்றி அமர்த்தினர். தொடர்ந்து தேரை பொது மக்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் சன்னதியில் இருந்து சிறு தேரில் விநாயகர் முன்னே செல்ல புறப்பட்ட தேர் பிள்ளையார் கோயில் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக மாலை சந்நிதியை மாலை வந்தடையும். தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேர் சன்னதியை அடைந்ததும் ஆண்கள் கோயிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணமும், பெண்கள் நடை கும்பிடு போட்டும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர். திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x