வைகாசி விசாகத்தை முன்னிட்டு வடபழனியில் தேரோட்டம் கோலாகலம் - ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்


சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. | படம்: ம.பிரபு |

சென்னை: வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழாதொடங்கியது. தொடர்ந்து, வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சூரிய பிரபை, சந்திர பிரபை, ஆட்டுக்கிடா, நாக வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன. 17-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு, 18-ம் தேதியானை புறப்பாடும் நடைபெற்றது.இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை, காலசந்தி பூஜைகள், சிறப்பு பூஜைகளுக்கு பின் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி
முருகன் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக
நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்
வடம் பிடித்துதேர் இழுத்தனர்.

தேரில் உற்சவர் காலை 7.45 மணிக்கு எழுந்தருளினார். 7.50 மணிக்கு செண்டை மேளம், சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் தேரில் வலம் வந்து முருகப் பெருமான் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் தேர் காலை 11.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

தேரில் வீதி உலா வந்த களைப்பு நீங்கும் விதமாக, சுப்பிரமணிய சுவாமிக்கு இரவு 7 மணி அளவில் ஒய்யாளி உற்சவம் நடந்தது. நாளை (21-ம் தேதி) வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி.
படங்கள்: எஸ்.சத்தியசீலன்

வைகாசி விசாகமான 22-ம் தேதி காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடும், சுப்பிரமணியர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

பின்னர், கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.மே 24 முதல் ஜூன் 2-ம் தேதி வரை தினமும் மாலையில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, இசை சொற்பொழிவு உள்ளிட்ட விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

x