விழுப்புரம் அருகே கோலியனூரில் புத்துவாயம்மன் கோயில் தேரோட்டம்


விழுப்புரம் அருகே கோலியனூரில் புத்து வாயம்மன் கோயில் தேரோட்டம் நடை பெற்றது.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூரில் பிரசித்திபெற்ற புத்துவாயம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறும். இவ்விழாவின் 12-ம் நாளான நேற்றுமுக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை செய்யப்பட்டு 60 அடியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் அமர வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோலியனூர் கடை தெருவில் தொடங்கி, தோப்புத்தெரு, மேற்கு தெரு, கிழக்கு தெரு, நாப்பாளைய தெரு, வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இந்த தேர் திருவிழாவில் கோலியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

x