இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் ஜூன் 13-ம் தேதி கலந்தாய்வு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1,862 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றிய அளவில் ஜூன 13-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு தேவையுள்ள இதர பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்படுவர். அதன்படி 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த மே 28-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அதன் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக பணிநிரவல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கல்வியாண்டு முடிவில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களை கணக்கில் கொண்டு உபரி பணியிடங்கள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், பணிநிரவல் கலந்தாய்வு ஜூன் 13-ம் தேதி நடைபெறும் என்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; கடந்த ஜூன் 7-ம் தேதி இணையவழியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மே 31-ம் தேதி நிலவரப்படி மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி, ஒய்வுபெற்ற ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை விவரங்களை கொண்டு உபரி பணியிடங்கள் எண்ணிக்கை தற்போது 1,862 ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உபரியாக உள்ள 1,862 ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக ஒன்றியத்துக்குள் மட்டும் பணிநிரவல் வழங்கப்பட உள்ளது.

இதற்கான பணிநிரவல் கலந்தாய்வு ஜூன் 13-ம் தேதி நடைபெற உள்ளது. ஒன்றிய அளவில் மாறுதல் வழங்கப்பட்ட பின்பு எஞ்சியுள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டதும் 2-ம் கட்டமாக பணிநிரவல் மேற்கொள்ளப்படும். அதேசமயம் பணிநிரவலுக்கு முன்பாக மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வும், தாய் ஒன்றியத்துக்கு வர வேண்டி இடைநிலை ஆசிரியர்களின் மாறுதலும் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மேலும், உரிய வழிமுறைகளை பின்பற்றி பணிநிரவல் கலந்தாய்வை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x