ஜேஇஇ பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு: 48,248 மாணவ, மாணவிகள் தேர்ச்சி


சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு முடிவுகள் வெளியாயின. 48,248 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.

அதன்படி, நடப்பாண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு, கடந்த மே 26-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னை ஐஐடி நடத்திய இந்த தேர்வை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 80,200 பேர் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின.

இந்த தேர்வில் 7,964 மாணவிகள் உட்பட மொத்தம் 48,248 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லி ஐஐடி மண்டல பகுதியை சேர்ந்த மாணவர் வேத் லகோட்டி,360-க்கு 355 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் மாணவி த்விஜா தர்மேஷ்குமார் படேல் 322 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 2,465 மாணவர்கள் தேர்வு எழுதினர்.அதில் 594 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை ஐஐடி மண்டலத்தில் மட்டும் 11,180 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. அதன் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

x