முதுநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு: இணையவழியில் இன்று நடைபெறுகிறது


கோப்புப் படம்

சென்னை: அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு இணையவழியில் இன்று (ஜூன் 10) நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 6,218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 27.24 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சுமார் 1.16 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உபரியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநிரவல் செய்யப்படும்.

அதன்படி 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணிசமான முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு இன்று (ஜூன் 10) நடைபெற உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமுதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கடந்த 2023-24-ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி உபரியாக உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு இன்று மதியம் 2 மணிக்கு எமிஸ்இணையதளம் வாயிலாக நடை பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

x