சிவகங்கை அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 30 பேர் காயம்


செம்பனூர் அருகே விபத்துக்குள்ளான வேன்.

சிவகங்கை: சிவகங்கை அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் பகுதியைச் சேர்ந்த 32 பேர் ஒரு வேனில் கடம்பங்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். செம்பனூர் அருகே சென்ற போது வேன் எதிர்பாராத விதமாக சாலையோரமாக கவிழ்ந்தது. இதில் கீழப்பிடாவூரைச் சேர்ந்த கலைஞர் (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்துக் குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x