கேஎம்சி-க்கு மருந்து வாங்க வந்த மூதாட்டியிடம் பிரதமர் பெயரைச் சொல்லி நூதன முறையில் செயின் பறிப்பு


சென்னை: சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சின்னராஜ் மனைவி சாந்தா (75). இவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட கணவர் சின்னராஜுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்குவதற்காக நேற்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, மாத்திரைகள் வழங்கும் இடம் அருகே நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மூதாட்டியிடம் மெல்ல பேச்சுக் கொடுத்துள்ளார்.

அப்போது அவர், “மத்திய அரசின் மக்கள் சேவை மையத்தில் இருந்து வந்திருக்கிறேன். பிதமர் மோடி, வயதானவர்களுக்கு வரும் 13-ம் தேதி ருபாய் 10 லட்சம் (வங்கிக் கணக்கில் செலுத்துகிறார்) தருகிறார். அதனால் இந்த வெள்ளைத் தாளில் கையெழுத்திடுங்கள் 4 இடங்களில் மூதாட்டியிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். பின்னர் மூதாட்டி அணிந்திருந்த ஐந்தே கால் சவரன் தாலிச் செயினை கழற்றிகேட்டுள்ளார். “செயினை எதற்குக் கேட்கிறாய் தம்பி?” என மூதாட்டி கேட்டுள்ளார். அதற்கு நபர், “செயினில் ஒரு நம்பர் இருக்கும் அதனை பார்த்து எழுத வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதை நம்பி அந்த மூதாட்டி செயினை கழற்றிக் கொடுத்துள்ளார். அப்படி கழற்றிக் கொடுத்த சிறிது நேரத்தில் அந்த நபர் செயினில் ஏதோ தடவி கொடுத்துள்ளார். இதை அறியாத மூதாட்டி செயினை வாங்கி கழுத்தில் அணிந்த சற்று நேரத்தில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மர்ம நபர் மூதாட்டியிடம் செயினை மீண்டும் கழற்றிக் கேட்டபோது, அரைகுறை நினைவில் இருந்த மூதாட்டி மீண்டும் செயினை கழற்றிக் கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து செயினை வாங்கிய அந்த நபர் சற்று நேரத்தில் தான் திரும்பி வருவதாகவும், அதுவரை அங்கேயே ஓரமாக அமர்ந்திருக்கும் படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், வெகு நேரமாகியும் அந்த நபர் திரும்பி வராததால் மூதாட்டி அவரது மகள் கண்ணகியை வரவழைத்து, விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். பதறிப் போன மகள் சொன்ன பிறகுதான், தான் மோசம் போய்விட்ட விஷயம் அந்த மூதாட்டிக்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து தாயும் மகளும் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு மூதாட்டியை ஏமாற்றிய மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

x