சென்னை | ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணிடம் பணம்பறித்த போலி எஸ்.ஐ.


சென்னை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் குமரப்பா, தெருவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி கொரியர் நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். கடந்த 27-ம் தேதி காலை செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை போலீஸ் எஸ்.ஐ. என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

உங்கள் ஆபாச படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளார். பயந்து போன அப்பெண் போலீஸ் என கூறிய அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ.6,500 அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் மன்னார்குடியில் வசிக்கும் இளம் பெண்ணின் தந்தையிடம், எஸ்.ஐ. என அறிமுகப்படுத்திக் கொண்ட அதே நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை பற்றி தவறாக கூறியுள்ளார். மேலும் உங்கள் பெண்ணின் ஆபாச புகைப்படம், வீடியோவை இணையதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என மிரட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

x