ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு: விசிக பிரமுகரின் மகன் கைது


அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக மாவட்டத் துணை அமைப்பாளர் மகனை போலீஸார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நரசிங்கபாளையம் கிராமம் காலனித் தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம் குமார் (21). இவர், பாலிடெக்னிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இடையில் அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டதால், அந்தப் பெண் பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அந்தப் பெண் ஊருக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார், அவ்வழியாக காட்டுமன்னார் குடியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

இதனால், அந்த பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து வெடித்தது. இதைக் கண்ட பயணிகள் பேருந்தைவிட்டு இறங்கி ஓடினர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸார் பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x