கிர்கிஸ்தானில் தாக்குதல்: மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தல்


புதுடெல்லி: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் அங்குள்ள தத்தம் மாணவர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளன.

கடந்த மே 13 ஆம் தேதி கிர்கிஸ்தான் - எகிப்து மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்பான வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து கிர்கிஸ்தான் மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்களைத் தேடித்தேடி தாக்கும் சூழல் நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாங்கள் நம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போதுவரை நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அவசரத் தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் எண் வழங்கியுள்ளோம். 0555710041 என்ற எண்ணில் மாணவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மருத்துவப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன. சில சமூகவலைதள வீடியோக்களில் பாகிஸ்தான் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பாகிஸ்தான் மாணவிகள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பயிலும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கிரிகிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் ஹஸன் ஸாய்கம் உள்ளூர் பாதுகாப்புப் படையினருடன் சமரசம் பேசி பாகிஸ்தான் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

x