உடல் எடை குறைப்பு சிகிச்சை செய்து கொண்டவர் உயிரிழப்பு; தனியார் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்தது செல்லாது: ஐகோர்ட்


சென்னை: உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் இறந்ததை தொடர்ந்து, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்.23-ம் தேதி உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மறுநாள் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த மே 4-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபரின் முன் அனுமதி பெற்ற பிறகே அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

23ஆண்டுகளாக செயல்பட்டு வரும்அந்த மருத்துவமனையிடம், இந்தசம்பவம் குறித்து விளக்கம் கேட்காமல் அதன் பதிவை தற்காலிகமாகரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்தமருத்துவமனை தொடர்ந்து செயல்படலாம்” என அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “தற்போது மருத்துவ வசதி என்பது கார்ப்பரேட்மயமாகி விட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் அவசியமாகிறது. எனவே, ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் அதுபோன்ற மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

x