விநாயகர் கோயில் கட்டி வழிபடும் இந்துக்கள்; ஜமாத் நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்: திருப்பூரில் மதங்களை கடந்த மனிதம்


திருப்பூர்: திருப்பூர் அருகே கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில்ரோஸ் கார்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு வசிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ் கார்டன் முஸ்லிம்ஜமாத் சார்பில் பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் வாழும் இந்து மக்களுக்கு விநாயகர் கோயில் கட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில், ஜமாத்துக்கு சொந்தமான நிலத்தை கேட்டு இந்து மக்கள் அணுகினர். இதையடுத்து 3 சென்ட் நிலத்தை இந்துக்கள் கோயில் கட்டி வழிபட தானமாக தர முஸ்லிம்கள் முன்வந்தனர். இதையடுத்துஉரிய முறையில் தானம் தரப்பட்டு தற்போது கோயில் பணிகள் நிறைவடைந்து ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் அமைப்பினர் கூறும்போது, “இங்கு முஸ்லிம் மக்கள் வழிபட மசூதி உள்ளது. ஆனால் இந்துக்கள் வழிபட கோயில் இல்லை. கோயில் கட்ட நிலம் கேட்டனர். இதையடுத்து தானமாகவே 3 சென்ட் நிலத்தை வழங்கினோம்.

ஏற்கெனவே இந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ரம்ஜான் பண்டிகைக்கு விருந்து தருவோம். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு அவர்களும் இனிப்பு உள்ளிட்டவை தந்து உபசரிப்பார்கள். தற்போது சுற்றுவட்டார பகுதியில் கோயில் எங்கும் இல்லாததால், இந்த பகுதியில் வாழும் மக்கள் கோயிலுக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் இந்துக்களின் சிரமத்தை போக்கும் வகையில், ஜமாத்துக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்து மக்கள் கூறும்போது, “கடந்த 13 ஆண்டுகளாக இந்த பகுதியில் கோயில் இல்லை. தற்போது முஸ்லிம் ஜமாத் சார்பில் இடம் தானமாக வழங்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில் குடமுழுக்கு தினத்தில் ஜமாத் சார்பில் முஸ்லிம்கள் பல்வேறு சீர்தட்டுகளுடன், மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து தங்களுடைய அன்பை பகிர்ந்தனர். இது இருதரப்பிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

அதேபோல் குடமுழுக்கு நாளில் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து கோயில் வளாகத்தில் மதிய விருந்து சாப்பிட்டோம். இது இருதரப்பு ஒற்றுமையை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் இருந்ததாக, குடமுழுக்கு நிகழ்வுக்கு வெளியூரில் இருந்து வந்த பலரும் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் வரவேற்று, வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

x