நெல்லையில் மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: முதல்வருக்கு பேரவை தலைவர் அப்பாவு கடிதம்


சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில் அப்பாவு கூறியுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாக முளைத்துவிட்டன. இதனால், நெற்பயிர்களை வைக்கோலுக்குகூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன. பணகுடிக்கு அருகில் உள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்மணிகள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளன.

அதேபோல, ராதாபுரம் தாலுகா கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழையால், நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இவ்வாறு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே, மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.

இதை பேரிடராக கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளனர்.

இவ்வாறு கடிதத்தில் அப்பாவு தெரிவித்துள்ளார்.

x