90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மயில் பத்திரமாக மீட்பு


பேராவூரணி அருகே பின்னவாசலில் மயிலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வரும் தீயணைப்பு வீரர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து, உயிருக்குப் போராடிய மயிலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆவிடைக்குட்டி. விவசாயியான இவர் இன்று தனது வயலுக்கு சென்ற போது, அவருடைய தண்ணீர் இல்லாத, பாழடைந்த கிணற்றில் இருந்து மயில் அகவும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, 90 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றுக்குள் பெண் மயில் ஒன்று தவறி விழுந்து, மேலே பறந்து வரமுடியாமல் அலறிக் கொண்டிருந்தது.

உடனடியாக ஆவிடைக்குட்டி பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தார் ஆவிடைக்குட்டி. இதையடுத்து தீயணைப்பு அலுவலர் வீ. சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் பாதுகாப்பாக கயிறு கட்டி இறங்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

உயிருக்கு போராடிய மயிலை மீட்டு உயிருடன் வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

x