திருப்பூர் நொய்யல் ஆறு நல்லம்மன் தடுப்பணை கோயிலை சூழ்ந்த வெள்ளம்


திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால், நொய்யல் ஆறு நல்லம்மன் தடுப்பணை கோயிலை சூழ்ந்த வெள்ள நீர். (அடுத்தபடம்) நல்லம்மன் தடுப்பணையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால், நொய்யல் ஆற்று வெள்ளம் நல்லம்மன் தடுப்பணை கோயிலை சூழ்ந்தது. கடந்த 4 நாட்களாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே நல்லம்மன் தடுப்பணை கோயிலை நொய்யல் ஆற்று நீர் நேற்று சூழ்ந்தபடி சென்றது. இதனால், அந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

நல்லம்மன் தடுப்பணை கோயில் வெள்ளத்தால் சூழப்பட்டதை, பலரும் குடும்பத்துடன் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். குறிப்பாக குழந்தைகள் பலரும், நொய்யல் ஆற்றில் புது வெள்ளம் பாய்ந்ததை கண்டு ரசித்தனர்.

இதேபோல், திருப்பூர் மாநகரிலும் தண்ணீர் அதிகளவில் சென்றதால், ஈஸ்வரன் கோயில் நொய்யல் பாலத்தில் அதிகளவில் தண்ணீர் சென்றது. ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப் பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி, வெள்ள நீர் இருகரைகளை தொட்டு சென்றதால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

x