10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் நடிகர் விஜய்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு


சென்னை: 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 கட்டங்களாக நடிகர் விஜய் பரிசு வழங்குவார் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரிமாதம் தமிழக வெற்றிக் கழகம்என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234தொகுதிகளிலும், முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அதில், சான்றிதழும், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார். அப்போது, பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார்.

விஜய் இவ்வாறு விழா நடத்தியது அரசியலாக பார்க்கப்பட்டாலும், அவரது இந்த முயற்சி பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், ‘விரைவில் சந்திப்போம்’ என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முதல் 3 இடங்கள்

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை விஜய் கட்சி நிர்வாகிகள் சேகரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பி வந்தனர்.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மாணவர்களை நடிகர் விஜய் 2 கட்டங்களாக சந்தித்து பரிசு வழங்க இருக்கிறார் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை 'தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக ஜூன் 28-ம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள  ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர்,கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள்.

அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக ஜூலை 3-ம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள்.

அப்போது, மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி விஜய் கவுரவிக்க உள்ளார்.இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

x