ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணை ரத்து


சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை பொது சுகாதாரத்துறை ரத்து செய்துள்ள்து.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.

எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 25 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,021 மருத்துவர்கள் கலந்தாய்வு மூலம் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களில் 193 பேர் பணி ஆணை பெற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் சேரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது பணி ஆணையை பொது சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வில் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை அப்பணியிடங்களில் நியமித்து உத்தரவிட்டுள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், இது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், காலிப் பணியிடங்கள் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

x