அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்பட விதிமீறும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள்உள்பட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

சென்னை மாநகரில் இயக்கப்படும் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றஉச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்பட வில்லை. வாகனங்களின் முன்பக்கமற்றும் பின்பக்க கண்ணாடிகளில் மதச் சின்னங்கள், அரசியல் கட்சிதலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாகஅரசுப் பேரூந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் முழுவதுமாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்க வேண் டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், போக்குவரத்துவிதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

நம்பர் பிளேட்டுகளில் விதிகளுக்குப் புறம்பாக ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு நிறத்தில் கூலிங் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யவும் வேண்டும்.

இதுதொடர்பாக நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் வரும் ஜூன் 20 அன்று விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், என அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தனர்.

x