மேட்டூர் அணை நீர்மட்டம் 44.88 அடியாக சரிந்தது


மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 286 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 239 கனஅடியாக சற்று சரிந்தது. குடிநீர் தேவைக்காக, அணையில் இருந்து விநாடிக்கு 2,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தைவிட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 44.88 அடியாகவும், நீர்இருப்பு 14.73 டிஎம்சியாகவும் இருந்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2-ம் தேதி காலை விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 3-ம் தேதி மாலை 1,500 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 6 மணி வரை விநாடிக்கு 1,500 கனஅடியாகவே நீர்வரத்து தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து சற்றே உயர்ந்துள்ளது.

x