நாமக்கல்: பார்சலை கொண்டு சேர்க்காத தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்


நாமக்கல்: உரிய நேரத்தில் பார்சலை கொண்டு சேர்க்காத தனியார் டிராவல்ஸ் நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் கணேசன் (54). அவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள தனது மகனுக்கு சைக்கிள் ஒன்றை சேலத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் ப.வேலூர் கிளை மூலம் ரூ.520 கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார்.

ஓரிரு நாளில் சைக்கிள் சென்னையில் உள்ள தங்கள் நிறுவன அலுவலகத்துக்கு சென்று விடும். அங்கு சைக்கிளை பெற்றுக்கொள்ளலாம் என பார்சல் நிறுவனம் உறுதி அளித்திருந்தது. எனினும், 2 மாதங்கள் கடந்தும் சைக்கிளை டிராவல்ஸ் நிறுவனத்தினர் சென்னைக்கு கொண்டு சேர்க்கவில்லை.

இதில் மனவேதனைடைந்த கணேசன் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நுகர்வோர் நீதிமன்றம், தனியார் டிராவல்ஸ் நிறவனமும், அதன் கிளை அலுவலகமும் வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற சைக்கிள் பார்சலை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்காமல் சேவை குறைபாடு புரிந்துள்ளனர்.

எனவே, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட இழப்பு, மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை 4 வாரங்களுக்குள் டிராவல்ஸ் நிறுவனமும், அதன் கிளை அலுவலகமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

x