சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்தினருடன் ம.பி முதல்வர் வழிபாடு


சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபடும் மத்தியப் பிரதேச முதல்வர்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்தினருடன் வழிபட்டார்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன்யாதவ், குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார். இவரை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழுவினர் கும்ப மரியாதையுடன் மேளதாளம் முழங்க வரவேற்று வழிபடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

கோயிலில் 12 மணிக்கு பூஜை முடிவடைந்ததால் கோயில் கருவறைக்கு முன்புள்ள கனகசபையில் ஏற அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் கனக சபையின் கீழே இருந்து குடும்பத்தினருடன் வழிபட்டார். அதைத்தொடர்ந்து, கோவில் பிரகாரங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தார்.

அதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் முதல்வரின் குடும்பத்தினரை கோயில் தேவசபை முன்பு அமர வைத்து மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து அவர் கோயில் சிறப்பு விருந்தினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். வழிபாடுகளை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு புறப்பட்டார்.

மத்தியப் பிரதேச முதல்வர் வருகையொட்டி கோயில் மற்றும் ஹெலிகாப்டர் தளத்தில் சிதம்பரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

x