‘நீங்கள் நலமா’ திட்ட பயனாளிகளிடம் ஆட்சியர் உரையாடல்: சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிக்கு 3 சக்கர வாகனம் வழங்க உத்தரவு


ஆட்சியர் அருண்ராஜ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கூலி தொழிலாளியான இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் தனது 2 கால்களை இழந்தார். இவருக்கு, எல்லம்மாள் என்ற மனைவி, சுதர்சன்(12), ஆசன்ராஜ்(10) ஆகிய மகன்கள் உள்ளனர்.

கால்களை இழந்ததால், வேலை வாய்ப்பை இழந்தவர் கடந்த 2022-ம் ஆண்டு தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.8,325 பங்கு தொகையாக வழங்கி ரூ.58,275 மானியத்துடன் ரூ.1,66,500 என வங்கி கடன் பெற்று மாவு மில் தொடங்கி சுயதொழில் புரிந்து வருகிறார்.

இதன்மூலம், மாதம் ரூ.4 ஆயிரம் வருவாய் கிடைக்கப் பெற்று குடும்பம் நடத்தி வருகிறார். மேலும், இவரது மனைவி கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்த வருவாயைக் கொண்டு மகன்களை அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசு திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கப் பெறும் பயன்கள் குறித்து,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தொலைபேசி மூலம் பயனாளிகளிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தாட்கோ திட்டத்தில் வங்கி கடன் பெற்று சுயதொழில் புரிந்து வரும் நடராஜை மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். இதில், மாவுதொழில் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் மற்றும் தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கான திட்டம் உள்ளதா மற்றும் வங்கி கடனை செலுத்துதல் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது,பயனாளி நடராஜ் தான் ஒரு மாற்றுத் திறனாளி எனவும், தனக்கு சக்கர நாற்காலி வழங்கி உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு சக்கர நாற்காலி வழங்கக் கோரி மனு வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தெரிவித்தார

இதையடுத்து, 3 சக்கர வாகனம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், இவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

x