திருத்தணி கோயில் நிதியிலிருந்து ரூ.6.13 லட்சம் முறைகேடாக செலவழிப்பு: பொன் மாணிக்கவேல் புகார்


திருத்தணி: தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டு முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து ரூ.6.13 லட்சம் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது என திருத்தணி காவல் நிலையத்தில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் நேற்று ‘ஆலயம் காப்போம்’ அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்று திருத்தணி முருகன் கோயிலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

38 பக்கங்கள் கொண்ட அந்த புகார் மனுவில், ‘தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டு செப். 18-ம் தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்து 657 முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத் துறையின் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பொன். மாணிக்கவேல் தெரிவித்ததாவது: தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது முக்கிய பிரமுகர்களின் காலை சிற்றுண்டிக்காக திருத்தணி முருகன் கோயில் நிதியிலிருந்து, ஒரு சிற்றுண்டி ரூ.2,045 என ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 657 முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அப்போது பணியில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், முருகன் கோயில் இணை ஆணையர், மண்டல தணிக்கை அதிகாரி ஆகியோர் மீது காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x