தேவாலய சொத்துகளை பதிவுத் துறை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு


மதுரை: இந்து கோயில்கள், வக்பு வாரிய சொத்துகளைப்போல கிறிஸ்தவ தேவலாய சொத்துகளையும் பதிவுத்துறை சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் விஜயா என்பவரிடமிருந்து 2023-ல் சொத்து வாங்கினேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக சார் பதிவாளர் 29.3.2023-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனடியாக பத்திரப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் சார் பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், “சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில் தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (டிஇஎல்சி) சொத்துகளை உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவற்றின் அடிப்படையில் மனுதாரரின் சொத்துப் பதிவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழில் ‘சிவன் சொத்து குலநாசம்’ என்பார்கள். அதாவது கோயில் சொத்துகளை அபகரித்தால், குடும்பம் அழிந்துவிடும் என்பது இதன் அர்த்தம். இந்து, இஸ்லாமிய சட்டப்படியான சொத்துகளை பதிவுத் துறை சட்டம் பாதுகாக்கிறது. அந்த பதிவுத் துறை சட்டத்தில், தேவாலய சொத்துகள் சேர்க்கப் படவில்லை.

இந்து கோயில் சொத்துகள் இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படியும், வக்பு போர்டு சொத்துகள் வக்பு வாரிய சட்டப்படியும் பாதுகாக்கப் படுகின்றன. ஆனால் கிறிஸ்தவ ஆலய சொத்துகளுக்கு இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.

இந்தியா மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். எனவே, தேவாலய சொத்துகளை பதிவுத் துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டுவர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் டிஇஎல்சி சொத்து தொடர்பான பிரதான வழக்கு, பதிவுத் துறை ஐஜியின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிரதான மனு நிலுவையில் இல்லாதபோது, இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை.

பதிவுத் துறை ஐ.ஜி.யின் சுற்றறிக்கையில், சட்டப்படியான உத்தரவும் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து அனைத்து பதிவுத் துறை அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். எனவே, டிஇஎல்சி சொத்துகளைப் பொறுத்தவரை, தற்போது எந்த தடையும் இல்லை.

மேலும், தேவாலய சொத்துகள் பதிவுத் துறை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத நிலையில், அந்த சொத்துகளை பதிவு செய்ய மறுப்பது சரியல்ல. எனவே, சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் மீண்டும் பத்திரப் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

x