பழநி கோயிலில் திருவூடல் வைபவத்துடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு


பழநி

திண்டுக்கல்: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திருஊடல் வைபவம், கொடியிறக்குதலுடன் நிறைவு பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மே 21-ம் தேதி திருக்கல்யாணமும், மே 22-ம் தேதி தேரோட்டம்மும் நடைபெற்றது.

விழாவின் 10-ம் நாளான இன்று (மே 25) காலை 9.30 மணிக்கு விநாயகர், வீரபாகு தெய்வானை மற்றும் வள்ளி சமேத முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன் பின் வள்ளியை திருமணம் செய்து கொண்ட முத்துக்குமாரசுவாமி, தெய்வானையை சமாதானப்படுத்தும் திருஊடல் வைபவம் நடைபெற்றது.

அப்போது, முத்துக்குமாரசுவாமி வள்ளியை திருமணம் செய்ததை அறிந்து கோபம் அடைந்து கோயில் நடையை தெய்வானை சாத்திக் கொண்டார். சுவாமி வள்ளியுடன் கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு, வீரபாகுவை தெய்வானையிடம் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினார். அதற்கான தூதுப் பாடல்களை சிவநாகராஜன் பாடினார்.

சமாதானமடைந்த தெய்வானை கோயில் நடையை திறந்து சுவாமிக்கு வழிவிட கோயிலுக்குள் நுழைந்த முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்புரிந்தார். இரவு 8 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெற உள்ளது.

x