பர்கூர் - ஒரப்பம் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்


அக்னி வசந்த உற்சவ நிறைவு விழாவை முன்னிட்டு, பர்கூர் அருகே ஒரப்பம் திரவுபதியம்மன் கோயிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் துரியோதனன் மற்றும் பீமன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் சண்டையிட்டனர்.

கிருஷ்ணகிரி: அக்னி வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு, பர்கூர் அருகே ஒரப்பம் திரவுபதியம்மன் கோயிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

பர்கூர் அருகே ஒரப்பம் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெரிய ஒரப்பம், சின்ன ஒரப்பம், நாகம்பட்டி, பெரிய சுண்டம்பட்டி, சின்ன சுண்டம்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் அக்னி வசந்த உற்சவ விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஓம் சக்தி நாடக சபா குழுவினரின் சார்பில் தினசரி மகாபாரத சொற்பொழிவும், பாஞ்சாலி திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு நாடகம், அரவான் கடபலி உள்ளிட்ட நாடகங்கள் நடந்தன. விழாவின் நிறைவு நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக, கோயில் அருகில் 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாடக கலைஞர்கள் துரியோதனன் மற்றும் பீமன் வேடமிட்டு சண்டையிட்டனர்.

இதில் 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். படுகளம் நிறைவில் பஞ்சாலி சபதம் முடித்து கூந்தலை அள்ளி முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் தலையில் துடைப்பத்தால் அடிவாங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

x