காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை: நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை


கோப்புப் படம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை நிகழ்ச்சி நாளை (மே 22) நடைபெறுகிறது. இதனையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதுடன் நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை நடைபெற உள்ளது. மே 26-ம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் உள்ளூர் வெளியூர் வெளி மாநிலம் என 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த திருவிழாவுக்காக 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுவாமி ஊர்வலத்துக்கு இடையூறு இல்லாமல் பழைய ரயில்நிலையம், புதிய ரயில் நிலையம், ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு, ஓரிக்கை சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதியில் அமைக்கப்படும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் வரை மட்டுமே பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். கார் உள்ளிட்ட வாகனங்களும் சுவாமி ஊர்வலம் வரும் நேரங்களில் அந்த வழிகளில் அனுமதிக்கப்படாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x