மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரையும், ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்துள்ளது.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து இரண்டு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், சில தொழிலதிபர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது இடைக்கால ஜாமீன் பெற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், இவ்வழக்கில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியையும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை சேர்த்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதுவரை எட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையில் கேஜ்ரிவால் பெயர் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத் துறையினர், "முறைகேடு மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாக கேஜ்ரிவாலுக்கும் ஹவாலா ஆபரேட்டர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேஜ்ரிவால் தனது லேப்டாப் பாஸ்வேர்டை கொடுக்க மறுத்த நிலையில், ஹவாலா ஆபரேட்டர்களிடம் இருந்து கேஜ்ரிவால் சாட் செய்ததற்கான ஆதாரங்கள் மீட்கப்பட்டன" என்று தெரிவித்தனர்.

x