பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 11) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஇ, பிடெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ல் தொடங்கி ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49,918 மாணவ, மாணவிகள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 6,012 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 78,180 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதனிடையே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளை (ஜூன் 11) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்‌. இணைய வசதி இல்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்த சந்தேகம் இருப்பின் 01800-425-0110 எனும் எண் அல்லது tneacare@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

x