நான் முதல்வன் திட்டத்தில் தேர்வான 25 மாணவர்கள் லண்டன் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் நேற்று சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக லண்டன் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தனது சமூக வலைளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘‘சிறகுகள் விரியட்டும், மகிழ்ச்சி’’ என பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவியரின் தனித்திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிஅளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது, லண்டனில் உள்ள நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழகத்தில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்காக, கல்லூரிகள் மூலம்மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக்கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்பிறகு, அந்த 100 பேருக்கும் ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ,மாணவியர் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி வரை லண்டனில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

2 பேராசிரியர்கள்: இந்நிலையில், மாணவர்கள் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர். நேற்று காலை லண்டன்புறப்பட்ட மாணவ மாணவியரை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக சென்னை விமானநிலையம் வந்த மாணவர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள் வரவேற்று, அழைத்துச்சென்றனர்.

அப்போது, பயணம் குறித்து மாணவி கிருத்திகா கூறும்போது,‘‘ நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் அதிகமான பயிற்சிகள் கிடைத்தன. ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்பட்டன.

தற்போது 10 நாட்கள் அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியில் இருந்து 25 பேர் தேர்வுசெய்யப்பட்டு, லண்டன் செல்கிறோம். இது எங்கள் வாழ்வில் மிகுந்த பயனைத் தரும்’’ என்றார்.

மாணவர் யோகேஷ்வரன் கூறும்போது,‘‘ நான் முதல்வன் திட்டத்தில் தற்போதைய சூழலுக்கு என்ன தேவையோ, அந்த பயிற்சியை எங்களுக்கு அளித்தனர். சிறப்புபயி்ற்சிக்காக தற்போது லண்டன் செல்கிறோம். இதற்காக பல்வேறு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. லண்டன் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

x