முன் விரோதம் காரணமாக சென்னையில் ரவுடி கொலை: தப்பியோடிய கும்பலை தேடும் தனிப்படை


சென்னை: ஐசிஎப், டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (29). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதி எம்.ஆர். நாயுடு 2-வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியது. தகவல் அறிந்து வில்லிவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து உதயகுமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொலையாளிகளைப் பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார்சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், “ரஞ்சித் என்கின்ற டபுள் ரஞ்சித் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு முன்பகை காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அக்கொலை வழக்கில் உதயகுமார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக உதயகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x